காஷ்மீரில் 8 வயது சிறுமி ரோஜா, அரக்கர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில், நாடோடி சமூகத்தைச் சேர்ந்த பக்கர்வால் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின், குல தொழிளே ஆடு, மாடு, குதிரைகளை மேய்பது ஆகும். ஆனால், கடந்த சில மாதங்களாக இதே பகுதியில் இருக்கும் இந்து சமூகத்தைச் சார்ந்த சிலருக்கும், நாடோடி சமூகத்தினருக்கு இடையில் பல்வேறு காரணங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த பிரச்சனையின் கொடூரம் தான் ரோஜா என்ற 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம். 8 பேர் கொண்ட கும்பலால் ரோஜா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி கடத்தப்பட்டு, கோயில் கருவறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். 6 நாட்கள் கழித்து அவளின் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு, அனைத்து மக்களும் நியாம் கேட்க தொடங்கியுள்ளனர். பல்வேறு போராட்டங்களை தாண்டி இந்த சம்பவம் தற்போது அனைத்து ஊடகங்களின் பார்வையையும் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ இந்த வேதனையை நீங்கள் புரிந்துகொள்ள அவள் உங்களுடைய சொந்த மகளாகத் தான் இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாகவும் இருக்கலாம். காப்பாற்ற தவறியதற்காக ஒரு ஆணாக, தந்தையாக, குடிமகனாக நான் கோபம் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, என் மகளே. இந்நாட்டை உனக்கு பாதுகாப்பானதாக நாங்கள் உருவாக்கவில்லை. உன்னைப்போன்ற எதிர்கால குழந்தைகளுக்காகவாவது நான் நீதிக்காக போராடுவேன். உனக்காக துயரப்படுகிறோம், உன்னை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் நடிகர் பிரகாஷ் ராஜூம், தனது ட்விட்டர் பக்கத்தில், சிறுமி ஆசிஃபாவிற்கு நியாம கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு தந்தையாக என் இதயம் வலியால் கதறுகிறது. இன்னும் எவ்வளவு துயரத்தைத் தான் தாங்கிக் கொள்வது. இது எல்லாவற்றிற்கும் ஒரு நீண்ட முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.