அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் 2-வது முறையாக அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் எனப் பெரிதும் கூறப்பட்ட நிலையில், அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார். இதையடுத்து கமலா ஹாரிஸிற்கு ஆதரவு பெருகி வருகிறது.
அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர்.
இவரது தாய் வழி தாத்தா பி.வி கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாடு- துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதையொட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலில் தர்ம சாஸ்தா கோயிலில் ஊர் மக்கள் கடந்த திங்கட்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, கமலா ஹாரிஸின் குடும்பத்தினர் கிராமம் மக்களுடன் நெருக்கமாக உள்ளனர். கமலா ஹாரிஸ் மற்றும் அவரது தாய் மாமா பாலச்சந்திரன் கோபாலன் ஆகியோர் கோயில் மறுசீரமைப்பிற்காக நன்கொடை வழங்கியதாக அங்குள்ள கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில பெற https://t.me/ietamil“