காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 'காவிரிக்கான தமிழகத்தின் குரல்' என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடந்தது.
கட்சிகளையும், இயக்கங்களையும் கடந்து காவிரி நீர் குறித்த நேர்மையான அக்கறையும், உண்மையான உணர்வும், தெளிவான திட்டங்களும் கொண்டுள்ள விவசாயிகள், வல்லுனர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்திடும் நோக்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.
இதில் கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நடிகர் நாசர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், அர்ஜுன் சம்பத், டி.ராஜேந்தர், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், கமல்ஹாசன் நேரில் சென்று அழைத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.
அதேபோல், ஆளும் கட்சியில் சார்பில் இருந்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "இது ஒரு நாளில் முடியும் கூட்டமில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை தட்டி எழுப்பும் கூட்டமாக இருக்கும். இது வெறும் கோஷமாக இருக்கப்போவதில்லை. நாங்கள் எங்களை தமிழர்களாக, விவசாயிகளின் நண்பர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது போன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்போம். இதை அதிகமாக பரப்புரை செய்யுங்கள். தான் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று திரு. ரஜினிகாந்த் அவர்கள் கூறினார். அவரும் இனி வரவேண்டும் என்பது எனது எண்ணம். நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரிந்திருந்தால் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தை புறக்கணித்து இருக்கமாட்டார்" என்றார்.