/tamil-ie/media/media_files/uploads/2018/02/a419.jpg)
ஓட்டு போடத்தொடங்கிய நாளில் இருந்தே அரசியலில் இருப்பதாக சொல்பவர் கமல்ஹாசன். ஆயினும், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகே அவர் வெளிப்படையாக அரசியல் கருத்துகளை கூறி வந்தார். ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த கமல்ஹாசன், இன்று புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்குகிறார்.
மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி எதிரே உள்ள திடலில் கமல்ஹாசனின் கட்சி பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடையின் பின்புறம் பிரம்மாண்டமான எல்இடி சுவர் அமைக்கப்படுகிறது. விளக்கு அலங்காரப் பணிகள், பார்வையாளர் அமரும் இடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் என பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
இன்று மாலை 5 மணிக்கு கட்சி பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரும் கமல்ஹாசன், 6 மணி அளவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றுகிறார். இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், கமல்ஹாசனை 'ஆண்டவர்' என்று அன்போடு அழைத்து வந்த ரசிகர்கள், இன்றுமுதல் 'நம்மவர்' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். கமல்ஹாசனை இனி 'நம்மவர்' என்று அழைக்க வேண்டும் என மேலிடத்தில் இருந்து ரசிகர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்பே, இதுகுறித்த அறிவிப்புகள் மன்றங்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டாலும் இன்று இந்த வார்த்தை டிரெண்டிங் ஆகி வருகிறது.
மன்றத்தில் உள்ள அனைவரும் 'நம்மவர்' ஃபேன் கிளப் என்ற ஐடி காடுடன் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை முழுவதும் 'நம்மவர்' என்ற பெயரிலேயே படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் பிரஸ் மீட்டில் கூட 'நம்மவர்' பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.