மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியை மாசுப்படுத்தி வருகிறது. அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்?' என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், இதற்கு தமிழக அரசு பதிலளித்தாக வேண்டும்" என்றார்.
மேலும், 'மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது மட்டும் போதாது அரசும் அமைதி காக்க வேண்டும். நாங்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை? என கேட்கிறார்கள். என்றுமே, போராட்டத்தின் மூலம் எதற்கும் தீர்வு காண முடியாது. வீதிக்கு வந்து போராடினால், இப்படி உயிர்ச் சேதங்கள் ஏற்படும் என்பதனால் தான் போராட்டங்களை ஆதரிப்பதில்லை. மக்களை கொல்வதற்காக போராட்டம் நடத்தக் கூடாது. போராட்டங்களுக்கு துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல. பேச்சுவார்த்தை மூலமே எல்லாவற்றிற்கும் தீர்வு காண முடியும்" என்றார்.