காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் மே 19இல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து விவசாய சங்கங்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும், பிற வல்லுனர்களின் வழிகாட்டுதல்படியும், காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை 'காவிரிக்கான தமிழகத்தின் குரல்' என்கிற தலைப்பில் களம் காணவும், போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் விரும்புகிறோம்.
அதற்கான முதல் கூட்டம் வருகின்ற மே மாதம் 19 ம் தேதி காலை 10.00 மணியளவில் சென்னை மெட்ரோ மேனர் ஓட்டல், 97, சிடன்ஹேம்ஸ் சாலை, நேரு அரங்கம், நுழைவாயில் எண் 4 எதிர்புறம், பெரியமேடு, சென்னை- 600003 என்கின்ற முகவரியில் நடைபெறும். அனைத்து விவசாய சங்கங்கள், அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், நீர் மேலாண்மை வல்லுநர்கள், அக்கறையுள்ள பெருமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று சந்தித்து கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த கமல், "அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் இது. தமிழக மக்களின் நலன் என்ற ஒரு கொள்கையின் கீழ் பல கட்சித் தலைவர்கள் இணையவேண்டும்.
தற்போது ஸ்டாலினிடம் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளேன். மேலும் விஜயகாந்த், தமிழிசை, தினகரன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். ஆளுங்கட்சியை அழைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறேன். சிலர் வருவதாக உறுதி அளித்துள்ளனர். மற்றவர்களும் வருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.