தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை திடீரென்று கடந்த 19.1.2018 அன்று இரவு உயர்த்தி, 20.1.2018 அன்றே இரவோடு இரவாக அமல்படுத்தியது தமிழக அரசு. மிகுந்த மன வேதனையோடு, பேருந்து கட்டண உயர்வை அதிகரிக்கிறோம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது. பொதுமக்களுடன் மாணவர்களும் இணைந்து, கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கும் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!" என்று பேருந்து கட்டண உயர்வு குறித்த தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு முன், அத்துறையிலேயே பணியாற்றும் வல்லுனர்களிடம் கருத்து கேட்டிருக்கலாம். அதைவிடுத்து, முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம் என தமிழக அரசை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, நேற்று இரண்டாம் நாளாக நடந்த ரசிகர்கள் சந்திப்பிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், "லட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும். மக்களை நோக்கிய பயணம் இது. இந்த பயணம் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம். நமது வெற்றி நிச்சயம். இதற்கு முன் ரசிகர்களை நான் எந்த கட்சி என்று கேட்டதில்லை. ஆனால், இனி கண்டிப்பாக கேட்பேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.