தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக கடந்த 60 நாட்களாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி ஆன நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று நிராகரித்துள்ளது. இதன் காரணமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.