சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியிருக்க, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மறுபுறம் நடந்துகொண்டிருக்க, இதற்கு நடுவில் சென்னையில் இருந்தே 71 இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தி அசத்தியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
கிராம சபை என்பது நம் நாட்டில் எப்போதிலிருந்தோ இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த உள்ளாட்சி அமைப்புகளை யாருமே கையில் எடுக்கவில்லை, சரியாக பயன்படுத்தி கொள்ளவும் இல்லை. இதைத்தான் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி வருகிறார். இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், கிராமங்களை நோக்கி நகரங்கள் ஒரு நாள் வரப்போகிறது என்று கமல் சொல்லி வந்தார். அப்போது இதை கமல் சொன்னபோது யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
கட்சி ஆரம்பித்த காலத்தில், மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எளிதாக நம்மால் முடியக்கூடிய ஒரு விசயத்தை இன்னொருவர் வந்து தான் செய்துதர வேண்டும் என ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று அப்போது மக்களிடம் கேட்ட கேள்வி நம் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
ஜூன் 28ம் தேதி, இன்று கமல், கிராம சபை கூட்டத்தை நடத்தினார். இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் கமல். தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, 71 இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. . இந்த கூட்டங்களில் சென்னையில் இருந்தபடி கமல்ஹாசன் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்ற கமல், பொதுமக்களுடன் உரையாடினார். ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் நொந்து போயுள்ள மக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.
மண்ணை பாதிக்கும் பிரச்சனைகளான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பற்றி எரியும் பிரச்சினைகளில் கமல் ஒதுங்கி இருக்கிறார் என்றும் ஒரு பேச்சு எழுந்தநிலையில், இதை அனைத்தையும் கிராம சபை கூட்டங்கள் மூலம் ஒரே நாளில் சுக்குநூறாக உடைத்தெறிந்து விட்டார் கமல். அசாத்தியமாக நினைக்கும் ஒரு விஷயத்தை சாத்தியமாக்கும் வலிமை கிராம சபைக்கு உண்டு என்பதை நினைவூட்டி அதற்கு வலு சேர்த்து வருகிறார் கமல். பழமை பொதிந்த கிராம சபையிலும், ஒரு நவீனத்தை புகுத்த கமலால் மட்டுமே சாத்தியம்!