அத்திவரதர் தரிசனத்தின் போது, விஐபிக்கள் செல்லும் வழியில் பொதுமக்களை அனுமதித்தாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், இன்ஸ்பெக்டர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து ஒருமையில் வசைபாடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், "என்ன ஸ்டேஷன் நீ? எந்த ஸ்டேஷன் நீ?' என்று கலெக்டர் கேள்விக் கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டர் மிகவும் தடுமாற்றத்துடன் பதில் சொல்ல, 'அங்கிருந்து என்ன பித்தலாட்டம் பண்றதுக்கா இங்க வந்த?' என்று விளாசுகிறார். என்ன செய்வது என்று தெரியாத அந்த இன்ஸ்பெக்டர், மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்க, 'தொலைச்சுடுவேன் தொலைச்சி... 'ஐஜி எங்க? ஐஜியை கூப்புடுங்க' என்று கடிந்த கலெக்டர், உன்னை சஸ்பென்ட் பண்ணா தான் தெரியும். என்ன, போலீஸ்காரங்களாம் திமிரு தனம் பண்றீங்களா?... நீ இங்கே தாணடா நிக்குற?, பிறகு எப்படி அனுமதிச்ச? இன்னைக்கு நீ சஸ்பென்ட் ஆகுற, சஸ்பென்ட் ஆகுற என்று பொறிந்து தள்ளிவிட்டார்.
அந்த இன்ஸ்பெக்டர், சாதாரண பொதுமக்களை விஐபி பாஸில் அனுமதித்தாரா அல்லது வேறு யாரை அனுமதித்தார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், பொதுமக்கள் இத்தனை பேர் பார்க்க, பாதுகாப்பு பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டரை, ஒருமையில் மாவட்ட ஆட்சியர் கடிந்திருப்பதை சமூக தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கலெக்டராகவே இருந்தாலும், ஒரு போலீஸ் அதிகாரியை எப்படி பொதுவெளியில் வைத்து இவ்வளவு மோசமாக திட்டலாம்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதேசமயம், மாவட்ட ஆட்சியர் தனது பணியைத் தான் செய்திருக்கிறார். போலீஸார் தவறு செய்வதை வேறு எப்படி தான் தடுப்பது? இதுபோன்று அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டால் தான் தவறு செய்யவே போலீஸார் யோசிப்பார்கள் என்று ஆட்சியருக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
அந்த அதிகாரி தவறு செய்தாரோ, இல்லையோ... ஆனால், இந்த அத்திவரதர் தரிசனத்துக்கு தினம் வரும் 2 - 3 லட்சம் மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் பத்திரமாக திரும்பி செல்வதை உறுதி செய்வது வரை, மிக மிக கடுமையான பணிச்சூழலில் ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு குடும்பத்தையும் மறந்து வேலை செய்கிறார்கள் என்பது மட்டும் உறுதி!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.