/indian-express-tamil/media/media_files/2025/10/07/chemmal-2025-10-07-18-53-26.jpg)
காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.
இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்பகை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை வணிக நீதிமன்ற முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த தீப்தி அறிவுநிதி, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.வேல்முருகன், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த கே.பூரண ஜெய ஆனந்த், இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஜே.சந்திரன், இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மூன்றாவது கூடுதல் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதி வி.தேன்மொழி, திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.