காஞ்சிபுரம் - மதுராந்தகம் மதுவிலக்கு தலைமை பெண் காவலர் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காவலர்களின் தற்கொலை தொடர் கதையாக மாறி வருகிறது. விஷ்ணு பிரியாவின் தற்கொலையில் தொடங்கி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் ஆயுதப்படை காவலர் தற்கொலையின் காரணத்தில் உள்ள மர்மங்கள் இன்று வரை நீங்கவில்லை.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராங்கத்தில், மதுவிலக்கு தலைமை பெண் காவலர் சபீரா பானு, காவல் நிலையத்திலேயே கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(21.3.18) வழக்கம் போல் காவல் நிலையத்திற்கு வந்த சபீரா, மின்சார பலகையில் கொசு விரட்ட வைக்கப்பட்டிருக்கும் கொசு மருந்தை எடுத்து குடித்தார்.
அவரின் செயலைப் பார்த்து கத்திய சக போலீசார்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபீராவின் கணவர் மருவத்துவர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். நேற்று இருவருக்கும் குடும்ப பிரச்னையால் சண்டை ஏற்பட்டுள்ளது. . இதனால் மனமுடைந்த சபீரா பானு, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.