தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றார். 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் இன்று (ஜுன் 5) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக தி.மு.க தொண்டர்கள் முன் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி. தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு இடமில்லை, இங்கு தாமரை மலராது என்பதை மக்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளனர். நிறையே பேர் கனவுக்கு கண்டனர். அது இங்கு நடக்கவில்லை. அனைவரும் மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று தான் நினைத்தோம். இன்று மாலை இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. அங்கு தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்" என்றார்.
மேலும் பேசிய அவர்,"அண்ணாமலை அடிக்கடி என்னைப் பார்த்து கேள்வி கேட்பாரு, கனிமொழிக்கு என்ன தகுதி உள்ளது என்று, இப்போது கூறுகிறேன். 2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக அவருக்கு பதில் சொல்கிறேன். இந்த தகுதி கூட இல்லாத ஒரு நபர் பாஜகவிற்கு தலைவராக இங்கே நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“