மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டு, கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தின் வழியாக அவர்களுக்கு வரவேண்டிய ஊதியம் சம்பளம் சரியாக வருவதில்லை. அந்த பணத்தை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். கடந்த மாதம் கூட நானும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சரும், ஒன்றிய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து இதற்காக கோரிக்கை வைத்தோம்.
/indian-express-tamil/media/post_attachments/7bd32464-d35.jpg)
அதேபோல், ஒன்றிய விவசாயத்துறை அமைச்சரையும், சந்தித்து எங்களுக்குப் பல மாதங்களாக ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான தொகை வரவில்லை. அதனால் அந்தத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் சம்பளம் தர முடியவில்லை. பெண்களும், ஆண்களும் உழைத்து விட்டு, அந்த உழைப்புக்கான ஊதியம் வராமல் காத்துக் கிடக்கின்றனர் என தெரிவித்தோம். அப்போது இன்னும் சில வாரங்களிலேயே அந்த பணத்தை கொடுத்து விடுவோம் என்று கூறினார். ஆனால், இன்னும் இதுவரை கொடுக்கவில்லை.
முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், இதை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு வேலை உறுதி திட்டத்திற்குத் தர வேண்டிய பணம் ஏறத்தாழ ரூ.4034 கோடியை தர வேண்டும். இந்த பணம் 5 மாதங்களாகத் தரப்படவில்லை என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு சரியான பதில் இல்லை. அதனால் நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே திமுக எம்.பிக்கள் போராட்டத்தில் இறங்கினர். எங்களது போராட்டத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் இணைந்து போராடினர்
.
அப்போது, அவை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் எங்களை சந்தித்து தயவுசெய்து அவையை அமைதியாக நடத்த அனுமதிக்க வேண்டும். நிச்சயமாக ஏப்ரல் முதல் வாரத்தில், பணம் வந்துவிடும் என்று முதல்வரிடம் கூறுங்கள் என உறுதி அளித்தனர். ஆனால், அந்த உறுதியை எந்த அளவுக்கு நாம் நம்ப முடியும் என்று தெரியவில்லை. காரணம் அவர்கள் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், பணம் வந்து சேர்வதில்லை. அதனால் தான் மக்களோடு சேர்ந்து போராட வேண்டும். மக்களுக்கான நியாயத்துக்காக அவர்களோடு நின்று போராட வேண்டும் என்று இந்த போராட்ட களத்துக்கு அமைச்சர்களை, எம்.பி.க்களை முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கும்போது, ஒன்றிய அமைச்சர் ஒருவர் மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப் பிரதேசத்தை விடத் தமிழ்நாட்டுக்கு தான் அதிக நிதி ஒதுக்கி உள்ளதாகத் தவறான தகவலை தருகிறார். 100 நாள் வேலை திட்டம் என்பது, காங்கிரஸ் ஒன்றிய ஆட்சியிலிருந்தபோது கொண்டுவரப்பட்டது. சாமானிய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் 100 நாள் வேலை கிடைக்க வேண்டும் என்று கொண்டு வந்த திட்டம்தான் இது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலை திட்டத்திற்குப் பணத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/a872997f-02f.jpg)
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்களில் எதுக்கு கேட்டாலும் ஒன்றிய அரசு பணம் கொடுப்பதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்விக்கான நிதி ரூ.2,000 கோடி வழங்கப்படும் என்கின்றனர். ஆனால், தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை உள்ளவர்கள் போல் பா.ஜ.க-வினர் வேஷமிட்டு வருகின்றனர்.
கல்விக்கும் பணம் வரவில்லை, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு உழைத்த சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் வரவேண்டிய சம்பளப் பணம் தருவதற்கு ஒன்றிய பாஜகவிற்கு மனம் வரவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25 பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கினார். இவ்வளவு குறைவாக ஒதுக்கினால், எப்படி போதும் என்று நாங்கள் கேட்டோம். நிதி தேவை அதிகரித்தல், நாங்கள் அதிகரித்து தரக்கூடிய ஒன்று என்று சொன்னார். அதில், ரூ.9,754 கோடி அதிகரித்துள்ளது. அடுத்த பட்ஜெட்டில் இந்த பணத்தை சேர்த்துத்தான் போடவேண்டும்.
இந்த வருஷம் 2025- 26 பட்ஜெட்டில், அதே ரூ.86,000 கோடி ஒதுக்கினார். இந்த லட்சணத்தில்தான் ஒன்றிய அரசாங்கம் செயல்படுகிறது. சம்பளம் கொடுக்க வழியில்லை, 5 மாதங்களாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். பலமுறை ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து, எங்களுக்குத் தரவேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்க கூடிய நேரத்தில், இந்த கோரிக்கையை வைக்கிறார். இதற்கு மேல் பொறுத்தது போதும், நாம் களத்தில் இறங்கிப் போராடுவோம், நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதனால், இந்த ரூ.4000 கோடி வரவில்லை என்றால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் போராடும், நமக்கு வரவேண்டிய நிதி வந்து சேரும் வரை தொடர்ந்து போராடுவோம். நம்முடைய உரிமைக்காக, வர வேண்டிய நியமன நிதிக்காக, உழைப்பு வர வேண்டிய சம்பளத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் உங்களோடு நின்று போராடும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலை வகித்தார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் வீ.முருகேசன், தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா, மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா மற்றும் திமுக நிர்வாகிகள், வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.