Advertisment

'நான் கலைஞரிடம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம்': பள்ளி விழாவில் குட்டி ஸ்டோரி சொன்ன கனிமொழி

திரும்பிப் போகிறோம் என்றால் கரைக்குத் தான் போக முடியும். ஆனால் அந்த மீதி தூரம் கடந்து விட்டால் நம் நம்முடைய இலக்கை தொட்டவராக மாறி விடுவோம் என்று தென்னனிடம் கலைஞர் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanimozhi MP

Kanimozhi MP

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில், புனித வளன் மேல் நிலைப்பள்ளி வெள்ளி விழா இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் வண்ண வண்ண உடையில் கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கியம், நாட்டுப்பற்று என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, வெள்ளி விழாவில் கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கலைஞர் பற்றிக் குட்டி ஸ்டோரி ஒன்றைச் சொன்னார். கனிமொழி எம்.பி பேசியதாவது, "என்னுடைய தந்தை கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார். அவர் வாழ்க்கையில் பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.

தோல்வி வரும்போது அவர் என்றுமே துவண்டுபோனது இல்லை. ஒரு தேர்தல் தோல்வி பிறகு அடுத்த நாள் அடுத்த வேலை என்ன, அடுத்த தேர்தலுக்கான பணி என்ன? என்று தான் சிந்திப்பாரே தவிர, இந்த தேர்தல் முடிவு என்பது நமக்கு ஏற்றதாக இல்லை, மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. அதனால் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு மனதைக் கஷ்டப்படுத்திக் கொள்ள மாட்டார்.

வாழ்க்கை கதை

தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரமான ஒன்று இல்லை. உங்கள் திறமை எதிலே இருக்கிறது என்று புரிந்து கொண்டு இந்த முறை இல்லை என்றால் அடுத்த முறை நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும் என்ற முழு மனதோடு நீங்கள் அதைச் செய்தால், நிச்சயமாக அத்தனை பேரும் வெற்றி பெற முடியும். ஒரே ஒரு கதை அவருடைய வாழ்க்கையிலிருந்து சொல்கிறேன்.

அவருடைய பள்ளி நாட்களில் திருவாரூரில் படித்தார். அங்கே கோவிலில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அந்த குளத்தில் நடுவில் ஒரு மண்டபம் இருக்கும். அந்த குளம் மிகவும் பெரிய குளம். அந்த குளத்தின் நடுவில் இருக்கக் கூடிய மண்டபத்திற்கு நிறையப் பேர் நீந்திப் போக ஆசைப்படுவார்கள். பொதுவாகப் படகில் போவார்கள், ஏன் என்றால் அது தூரம். ஒரு நாள், கலைஞரும் அவருடைய நண்பர் தென்னன் (பள்ளிப் பருவ நண்பன்) இருவரும் கடைசி வரைக்கும் நண்பர்களாக இருந்தார்கள்.

publive-image

இலக்கை அடைந்தே தீருவேன்

இருவரும் ஒரு நாள், அந்த குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்திற்கு நீந்திப் போக வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பாதி தூரம் நீந்தி வந்து விட்டார்கள். நீண்ட தூரம் நீந்தியதால் இருவரும் களைத்து விட்டார்கள். தென்னன் அவர்கள் கலைஞர் அவர்களிடம், நாம் திரும்பிப் போய்விடலாம் என்று கூறினார்.

கலைஞர் அவரிடம், பாதி தூரம் வந்துவிட்டோம். மீதி பாதி தூரம் தான் இருக்கிறது. திரும்பி போகும் அதே தூரம், நாம் நீந்தினால் மண்டபத்தைச் சேர முடியும். திரும்பிப் போகிறோம் என்றால் கரைக்குத் தான் போக முடியும். ஆனால் அந்த மீதி தூரம் கடந்து விட்டால் நம் நம்முடைய இலக்கை தொட்டவராக மாறி விடுவோம். இருவரும் அந்த மண்டபத்தை அடைந்து, சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் என் வாழ்க்கையில் அவரிடம் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

publive-image

திரும்பிப் போவது, விட்டு விடுவது என்பதை இந்த நொடியிலிருந்து உங்கள் மனதிலிருந்து தூக்கி எறிந்து விடுங்கள். நீங்கள் நினைக்கக் கூடிய எல்லையை, இலக்கை நிச்சயமாக அடைந்தே தீருவேன் என்ற தன்னம்பிக்கையோடு நீங்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை மேற்கொள்ளக் கொள்ளுங்கள். வெற்றி என்பது உங்கள் கைகளில் இருக்கக் கூடிய ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடும்" என்றார்.

மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன்–மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை சேர்மன் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment