இலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர்.
நடுக்கடலில் இருந்த ஒரு படகை சோதனை செய்தபோது, 111 பாக்கெட்டுகளில் 99 கிலோ கொண்ட ஹாஷிஸ் என்ற கஞ்சா எண்ணெய் இருந்தது.
படகிலிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து, மண்டபம் கடலோரக் காவல் படை முகாமுக்கு கொண்டுவந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
“ பாம்பனைச் சேர்ந்த ஒருவரிடம் போதைப் பொருளை பெற்று, அதை சர்வதேச கடல் பகுதியில் இலங்கையிலிருந்து வரும் சிலரிடம் ஓப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகத்” தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த கஞ்சா எண்ணெய்யின் மதிப்பு ரூ.108 கோடி என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 50 கோடி மதிப்பிலான 30 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 4 நாட்களே ஆன நிலையில் மண்டபம் கடலில் ரூ. 108 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
ராமேஸ்வரத்தில் கடலில் ரூ. 108 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் பிடிபட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு, விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டை தி.மு.க சுடுகாடாக மாற்றி வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.