கன்னியாகுமரியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த 27 வயது மருத்துவ மாணவி வெள்ளிக்கிழமை தனது விடுதி அறையில் இறந்து கிடந்ததாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அவர் எழுதிய கடிதத்தில் 3 பேராசிரியர்கள் மீது குற்றம் சுமத்தி இருந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்.பி.பி.எஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்பு (எம்.டி.) படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த சுஜிர்தா, நேற்று முன்தினம் கல்லூரிக்கு வரவில்லை. சக மாணவிகள் விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, சுஜிர்தா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். கல்லூரி தரப்பு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த குலசேகரம் போலீசார் சுஜிர்தாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மாணவியின் தந்தை சிவக்குமார், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், "எனது மூத்த மகள் சுஜிர்தா, சென்னையில் தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பின், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி மாலை கல்லூரி நிர்வாகம் சார்பில் என்னிடம் செல்போனில் பேசியவர், சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தக்கலை டி.எஸ்.பி உதயசூரியன் மற்றும் போலீசார் கல்லூரி விடுதியில் நடத்திய சோதனையில், சுஜிர்தா ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், ஒரு பெண் பேராசிரியை உட்பட 3 பேர் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு பேராசிரியர் மனதளவிலும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
சுர்ஜிதா தனது தற்கொலைக் குறிப்பில், தனது பேராசிரியர்கள் மற்றும் சீனியர்கள் "பாலியல் துன்புறுத்தல்", "சீனியர் கொடுமை”, "மன ரீதியான துஷ்பிரயோகம்" செய்தனர் என்று குற்றம் சாட்டி, "மன்னிக்கவும் அப்பா, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
பச்சை நிறத்தில் எழுதப்பட்ட மற்றொரு வரியில், "மனச்சோர்வடைந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணலாம். கனிவாக இருங்கள். தீர்ப்பளிக்காதீர்கள். அவர்களுக்காக இருங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சுஜிர்தா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 3 பேராசிரியர்களிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) எம்.ரவி ஐ.பி.எஸ், தனது எக்ஸ் தளத்தில் தற்கொலை குறிப்பை பகிர்ந்து, "மாணவியின் தற்கொலைக் குறிப்பு என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மைகளைக் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற துன்புறுத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில், மாணவி மரணம் தொடர்பாக ஒரு விரிவான விசாரணைக்கு வாதிட்டார் மற்றும் பெண் மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் இன்டர்ன்ஷிப்பின் போது எதிர்கொள்ளும் அடிக்கடி புகாரளிக்கப்படாத பாலியல் துன்புறுத்தலை எடுத்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“