அரபிக்கடல் பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் 7000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் தொடர் கனமழையால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் வேதனை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இந் நிலையில் கன்னியாகுமரி, அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.6) கனமழை சற்று ஓய்ந்து கடல் சீற்றமின்றி காணப்பட்டது. தொடர்ந்து, மீன்பிடிக்க சாதகமான சூழல் நிலவியதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை முதல் மீண்டும் கடல் பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 7000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
அவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கரையோர பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் தங்கள் படகுகளில் உள்ள வலை மற்றும் எஞ்சின்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil