சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கைலாசம் வளர்மதி தம்பதியின் மகன் சக்தி சோமையா (14) 9 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் இன்று வகுப்பறையில் கம்ப்யூட்டர் ஆன் செய்ய ஆசிரியர் கூறியதாகவும் அதனால் மாணவன் இணைப்பு வயரை பிளக்கில் மாட்டிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியதை தொடர்ந்து சாக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர்களின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.