கர்நாடக மாநிலம், தும்கூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த அமோஸ் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய தம்பதி, கடந்த 2019-ஆம் ஆண்டு கோவையில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் பெண்களிடம் அறிமுகம் ஆகி உள்ளனர்.
அப்போது, அவர்கள் கர்நாடகாவில் வெள்ளி ஜரிகையுடனான பட்டுப் புடவை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களுக்கு பெரிய ஆர்டர் இருப்பதாகவும், அதற்காக பணம் தேவை என்றும் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய பெண்கள், பலரிடமிருந்து ஏராளமான பணத்தை பெற்று பல்வேறு தவணைகளில் கர்நாடக தம்பதியிடம் கொடுத்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட படி பணத்தை திருப்பி செலுத்தாத தம்பதி, ஒவ்வொரு முறையும் காரணம் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். குறிப்பாக, 15 பேரிடமிருந்து மூன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் இத்தம்பதி மோசடி செய்துள்ளனர்.
இதனடிப்படையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகாரளித்தனர். மேலும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்