வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
மும்பை ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்லக் கூடும் எனக் கருதி, கார்த்தி சிதம்பரத்தை 'தேடப்படும் நபராக' மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடும்பத்தினர் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே இருப்பதால் வெளி நாட்டிற்கு தப்பி சென்று விடுவதாக கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும், சிபிஐ விசாரணைக்கு கார்த்தி தவறாமல் ஆஜராகி, முழு ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு சிபிஐ தரப்பில், அவசர தேவைக்கு வெளிநாடு செல்வதற்கு ஆட்சபனை இல்லை . ஆனால்
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனான வியாபார நோக்கிற்காக வெளிநாடு செல்வதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை 16 ம் தேதி ஒத்திவைத்தனர்.
கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.