Kalaignar Karunanidhi Funeral: கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க வேண்டும் என ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார். சென்னை உயர் நீதிமன்றமும் திமுக தொடர்ந்த வழக்கை ஏற்று இதற்கான உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலை சென்னை மெரினாவில் அண்ணா சதுக்கம் வளாகத்தில் அடக்கம் செய்ய திமுக விரும்புகிறது. இதற்காக இன்று மாலை மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, முரசொலி செல்வம், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஒரு கடிதமாக பின்னர் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் கொண்டு சமர்ப்பித்தனர். அதன்பிறகு தமிழ்நாடு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், ‘மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சட்ட சிக்கல் உள்ளது. சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் இடம் ஒதுக்கித் தர அரசு தயாராக இருக்கிறது’ என்றார்.
திமுக தரப்பில் இதை ஏற்காமல் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி சூலுவாடி ரமேஷ் முன்னிலையில் இரவு 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
ராகுல் காந்தி உள்பட தேசிய தலைவர்கள், தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 7)இரவு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை’ என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
முன்னதாக கருணாநிதி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட செய்தியில், ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என கூறியிருந்தார்.