பொங்கல் திருநாளான இன்று திமுக தொண்டர்களை கருணாநிதி சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாக ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர்.
பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. உழவர்களின் திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும், தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாகவும் கொண்டாட திமுக ஆட்சி காலத்தில் சட்டம் இயற்றியவர் கருணாநிதி. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை தொண்டர்கள் புடைசூழ உற்சாகமாக கொண்டாடுவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார்.
பொங்கல் திருநாளன்று கோபாலபுரத்தில் தன்னை சந்திக்கும் தொண்டர்களுக்கு தலா 10 ரூபாய் வழங்குவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார் அவர். கடந்த ஆண்டும் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
கருணாநிதியின் உடல்நிலை சமீப காலமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அண்மையில் ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர் கோபாலபுரம் இல்லத்தின் வாசல் வரை அழைத்து வரப்பட்டு தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இந்த ஆண்டு பொங்கல் திருநாளிலும் அவரை சந்திக்க தொண்டர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காலை 11 மணிக்கு கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து காலையில் இருந்தே தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவியத் தொடங்கினர்.
சரியாக 11 மணிக்கு முதல் மாடியில் இருந்து கருணாநிதியை தரை தளத்துக்கு ஸ்டாலின் அழைத்து வந்தார். கருணாநிதியைப் பார்த்த தொண்டர்கள், உற்சாகமாகி ‘தலைவர் கலைஞர் வாழ்க’ என்று கோஷம் போட்டனர். தொண்டர்களின் குரலைக் கேட்டதும் கருணாநிதியும் கையை காட்டினார். சிறிது நேரம் அங்கிருந்த அவர் மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.