காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி, கண் திறந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம், (ஜூலை 29) அவரது உடல் நிலையில், சிறிது பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால், அவரது உடல்நிலை சீரான நிலைக்கு திரும்பியதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
தினம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவர் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் விரைவில் குணமடைவார். காங்கிரஸ் கட்சிக்கும் கருணாநிதிக்கும் நடுவே நீண்ட கால உறவு உள்ளது. அவர் எங்கள் கட்சியின் நீண்ட கால நண்பர். இந்தியாவின் பெரிய அரசியல் தலைவர் ஆவார். கருணாநிதி மிகவும் உறுதியானவர். தமிழர்களுக்கே உரித்தான திடம் கருணாநிதியிடமும் உள்ளது. தமிழக மக்கள் எப்படி வலிமையானவர்களோ அப்படி கருணாநிதியும் வலிமையானவர். கருணாநிதிக்கு சோனியா காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாார். அவர் விரைவில் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.
இந்தச் சூழ்நிலையில், கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கே சென்று ராகுல் காந்தி நலம் விசாரிப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கருணாநிதியின் முகம் தெளிவாக தெரிகிறது. அவர் கண் திறந்து பார்ப்பது போன்று அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, வெங்கையா நாயுடு வந்த போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில், கருணாநிதியின் முகம் தெரியவில்லை. ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில், கருணாநிதியின் முகமும் தெளிவாக தெரிகிறது. அவர் கண் விழித்து பார்ப்பது போன்றும் உள்ளது. இதனால், கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என்றே கூறலாம்.
இப்புகைப்படத்தில் தெரியும் தரவுகளை வைத்து பார்க்கும் பொழுது,
கருணாநிதியின் இதயத் துடிப்பு 82 ஆக உள்ளது.
இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 95 ஆக உள்ளது.
சுவாச அளவு 20 என்று உள்ளது.
இந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.