மறைந்த கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் இன்று திறக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு : சோனியா காந்தி பங்கேற்பு முழு விவரம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மாலை 3.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகின்றனர். அவர் வரும் விமானம் 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறது. பின்னர் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் காரில் அண்ணா அறிவாலயம் வந்தடைகிறார்.
அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் சோனியா காந்தி. அதன் பின்னர் மெரினாவில் அமைந்திருக்கும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். இருவருக்கும் மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை அடுத்து பலத்த பாதுகாப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க, கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழா முடிந்த பின் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் சென்று சோனியா அஞ்சலி செலுத்த உள்ளார். தலைவர்கள் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.