மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு சென்னை அண்ணா அறிவாலயத்திலும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுகவின் தலைவராக இருந்தபோது கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இவருக்கு பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் பதவியேற்றார்.
தற்போது, மறைந்த கருணாநிதிக்கு உருவச் சிலை ஒன்று நிறுவ ஸ்டாலின் தலைமையில் திமுக முடிவெடுத்தது. இந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடக்கிறது. இதில் பங்கேற்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
கருணாநிதி சிலை திறப்பு ஏற்பாடுகள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட இருக்கும் கருணாநிதியின் சிலையை மாலை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். பின்னர், இந்த் சிலை திறப்பு நிகழ்வின் தொடர்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி உரை ஆற்றுகிறார். இவர்களை தவிர மு.க. ஸ்டாலின் சிறப்பு உரையாற்றுகிறார். அத்துடன் சிறப்பு விருந்தினர் சோனியா காந்தியும் உரையாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது
கருணாநிதி சிலை திறப்பு : சோனியா காந்தி சென்னையில் இன்று திறந்து வைக்கிறார்
ஆனால் பெய்ட்டி புயல் காரணமாக இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மழையை எதிர்கொள்ள தகுந்த ஏற்பாடுகளை அண்ணா அறிவாலயம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது.
Cyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்... ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்திலும், சுற்றுப் பகுதியிலும் மழைக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவியும் இடத்திலும், மழையை எதிர்கொள்ள பந்தல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
வானிலை குறித்த செய்தி தொடர்ந்து வருவதையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மைதானத்திற்கு சென்று ஏற்பாடுகள் குறித்த ஆய்வு நடத்தி வந்தார்.