முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை கடுமையாக தாக்கிப் பேசினார்.
Read More: வீடியோ : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொந்தளித்து கோஷம் எழுப்பிய கருணாஸ் ஆதரவாளர்கள்!
Read More: கருணாஸ் கைது: ஆங்கிலத்தில் படிக்க
‘நான் யார் தெரியுமா? என்ன செய்து விடுவாய்? இந்த அதிகாரம் இருப்பதால் தானே இந்த ஆட்டம்?.. யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா… ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். தமிழில் படித்து ஐபிஎஸ் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் விட்டு வைத்திருக்கிறேன்.
நம்ம தமிழ்க்காரன் என்று பார்த்தால், எங்கள் ஆட்களையே கையை உடை.. காலை உடை என்று உத்தரவு போடுகிறாய். எங்க ஆட்கள் கையை உடைத்தால், உன் கை, காலும் உடைக்கப்படும்” என்றார்.
Read More: கருணாஸுக்கு ஒரு சட்டம்; ஹெச் ராஜா - எஸ்.வி. சேகருக்கு ஒரு சட்டமா? : மு.க. ஸ்டாலின் கேள்வி
கருணாஸின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கருணாஸ், ‘நான் எங்கும் தலைமறைவாகவில்லை. ஓடி ஒளிய மாட்டேன். எதையும் சந்திக்க தயாராக உள்ளேன்’ என்றார்.
கருணாஸ் கைது
இந்தச் சூழ்நிலையில், நள்ளிரவு முதல் 2 காவல் ஆணையர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார், சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். பின்னர், இன்று காலை 6.30 மணியளவில் கருணாஸை கைது செய்த போலீசார், அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
கைதாகி வேனில் ஏற்றும் முன்பு ஊடகங்களிடம் பேசிய கருணாஸ், "சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை.
இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது, குற்றப்பிரிவு 307 கீழ் ஏன் வழக்கு பதிவு செய்தார்கள் என தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது. இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்.
துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள் நாங்கள். இந்த சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டு இருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார்.