MLA Karunas Seeking Bail for 2 More Cases in Chennai: கருணாஸ் எம்.எல்.ஏ. மேலும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 4 வரை அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.
கருணாஸ் இன்று (செப்டம்பர் 27) வேலூர் சிறையில் இருந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேலும் இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது காவலை அக்டோபர் 4 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னர் வந்த செய்தி கீழே:
கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்கிற பெயரில் அமைப்பு நடத்தி வருகிறார். 2016 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் ஆணைய ஆவணங்கள் அடிப்படையில் இவர் இப்போதும் அதிமுக எம்.எல்.ஏ.தான்!
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக.வில் அரங்கேறிய குழப்பத்தில் சசிகலா பக்கம் உறுதியாக நின்றார் கருணாஸ். அண்மையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தும் திரும்பினார்.
இந்தச் சூழலில்தான் சென்னையில் தனது கட்சிப் பிரமுகர் கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில பத்திரிகைகள், சில குறிப்பிட்ட சமூகங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கொந்தளிப்பான கருத்துகளை கருணாஸ் வெளிப்படுத்தினார்.
சமூக பதற்றத்தை அவர் பேச்சு ஏற்படுத்தியதாகவும், முதல்வருக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகவும் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருணாஸை கைது செய்தனர். கடந்த 23-ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார்.
கருணாஸ் தரப்பில் ஜாமீன் கேட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் அரசு தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. நேற்று இந்த விவகாரத்தை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கருணாஸை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்கவில்லை.
கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (செப்டம்பர் 27) வைத்துக்கொள்வதாக நீதிமன்றம் கூறியது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தொண்டர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்தப் போராட்டத்தில் போலீஸாரையும், கிரிக்கெட் ரசிகர்களையும் தாக்கியதாக கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர் மீது 2 வழக்குகள் சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த 2 வழக்குகளிலும் கருணாஸை கைது செய்வதாக நேற்று மாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை சமர்ப்பித்தனர்.
கருணாஸை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார். கருணாஸ் மீது புதிதாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகளிலும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
அதேசமயம் கருணாஸுக்கு ஜாமீன் கிடைப்பதை தடுக்கவே, கடந்த ஏப்ரலில் போடப்பட்ட ஐபிஎல் வழக்கை அரசு தரப்பு தூசு தட்டியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.