கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ கருணாஸ் மேலும் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை கடுமையாக தாக்கிப் பேசினார்.
கருணாஸின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த 23ம் தேதி அதிகாலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி கருணாஸ் எழும்பூர் 14-வது கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதேவேளையில், கருணாஸை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி எழும்பூர் 14-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருணாசிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கருணாஸை போலீஸ் காவலில் எடுக்கும் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு கருணாஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்ட போது
இதன்படி கருணாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸ் தரப்பிலும் ஜாமீன் வழங்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்து போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம். காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாஸை மேலும் 2 வழக்குகளில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் ரசிகர்களைத் தாக்கியதாகக் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது திருவல்லிக்கேணி காவல்துறை. இந்த வழக்கில்தான் வேலூர் மத்தியில் சிறையில் உள்ள கருணாஸை மீண்டும் போலீஸார் கைது செய்துள்ளனர்.