வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசிய கருணாஸ், தான் பேசியது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காவல்துறையையும், நீதித்துறையையும் கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது, தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை கடுமையாக ஏக வசனத்தில் பேசினார் கருணாஸ். நான் யார் தெரியுமா? என்ன செய்து விடுவாய் இந்த அதிகாரம் இருப்பதால் தானே இந்த ஆட்டம், யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். தமிழில் படித்து ஐபிஎஸ் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் விட்டு வைத்திருக்கிறேன். நம்ம தமிழ்க்காரன் என்று பார்த்தால், எங்கள் ஆட்களையே கையை உடை.. காலை உடை என்று ஏசிக்கு உத்தரவு போடுகிறாய். நம்ம ஆட்கள் கையை ஒடி காலை ஒடி என்றால் அவர் காலை ஒடி' என்று பேசினார்.
கருணாஸின் இந்தப்பேச்சு தற்போது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திவரும் நிலையில், பாஜக தலைவர் தமிழிசை கருணாஸின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ராஜா அண்ணன் சில வார்த்தைகளை தவறாக பேசினார் என்று இணையதளத்தில் போட்டு அவரை கைது செய்யணும் கைது செய்யணும் என்று சொல்கிறார்கள் அதே மாதிரி கருத்தைத்தான் காவல்துறையையும் கருணாஸ் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவரை கைது செய்ய கோரிக்கை வைக்க மறுக்கிறார்கள். பாஜகவுக்கு ஒரு மனநிலையும் மற்ற கட்சிகளுக்கு ஒரு மனநிலையும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு உள்ளது என்பதை பதிவு செய்கிறேன்" என்று கூறினார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், தான் பேசியது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என அறிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். தான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.