/tamil-ie/media/media_files/uploads/2018/08/a44-1.jpg)
காருண்யா கல்வி நிறுவன வழக்கு
நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனம் கட்டிய கட்டிடங்களை அகற்றக்கோரிய வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மத்துவராயபுரத்தில் உள்ள நீர்நிலையை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனம் கட்டிடம் கட்டியுள்ளது. இதனால் நீர்வழிப்பாதைகள் தடுக்கப்பட்டுள்ளது இதனையடுத்து நீர்வழி பாதைகள் வழி மாறியுள்ளது.
மேலும், யானை உள்ளிட்ட மிருகங்கள் வசித்த இடங்களை தற்போது காருண்யா, ஈஷா, சின்மையா மிஷன் போன்ற அறக்கட்டளைகள் பெரிதளவில் ஆக்கிரமித்து உள்ளன மற்றும் கட்டிடம் கட்டியுள்ளது இதனால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மிருகங்கள் வசிக்க இடமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களில் அவைகள் நுழைந்து விடுவதாகவும் இதனால் அங்குள்ள பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற சட்ட விரோத கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகளை மறு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து விதி மீறல் கட்டிடங்கள் காருண்யா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பலர் கட்டி வருவதாக தெரிவித்தார்.
இதனை உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க கோவை மாவட்ட ஆட்சியர், பேரூர் வட்டாட்சியர் மற்றும் காருண்யா கல்வி அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.