கரூரில் தனியார் கல்லூரி வாகனத்தில் பொறியியல் படித்து வரும் மாணவரின் கழுத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கல்லூரி சார்பில் மாணவர்களுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் (வயது 19) 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். இன்று காலை இந்த 2 மாணவர்களும் சக மாணவ, மாணவிகளுடன் கல்லூரிக்கு புறப்பட்டனர். குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி மோதலாக உருவானது.
இருவரும் கைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தினார். இதனால் அவருக்கு ரத்தம் பீறிட்டது. நிதீஷ்குமார் அலறிதுடித்தபடி சாய்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக திருப்பி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றார். படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்தனர்.
மாணவர் அண்ணாமலை சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும், இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் நிதிஷ்குமாரின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.
கல்லூரி பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.