/indian-express-tamil/media/media_files/2025/10/03/karur-vijay-stmbade-2025-10-03-18-54-08.jpg)
Vijay Karur Stampede
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், 116 பேர் காயமடைந்தனர். இந்தக் கொடுந்துயரச் சம்பவம் நடந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்தியப் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழுவினர் இன்று (அக்டோபர் 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எம்.ஏ.பேபி தலைமையிலான இந்தக் குழுவில் எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன் (கேரளா), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி, எம்எல்ஏ நாகைமாலி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
முதலில், குழுவினர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு சிறுவனைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயதான சிறுவன் துருவிஷ்ணுவின் குடும்பத்தினர் மற்றும் கரூர் ஏமூர்புதூர் பகுதியில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தவெக தலைவர் மீது சரமாரி தாக்கு!
கரூர் ஏமூர்புதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்தியப் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, பின்வருமாறு பேசினார்:
"இந்தக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ கட்சியினர் முழுவதுமாகத் தவறிவிட்டனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் தண்ணீரோ, உண்ண உணவோ எதுவுமின்றி சோர்வடைந்துள்ளனர். சம்பவம் நடந்த 3 மணி நேரம் கழித்து ட்வீட் செய்து, 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் ஒருபோதும் தலைவராக முடியாது.
ஒரு துயர சம்பவம் நடந்திருக்கும்போது, அவர் அங்கு சென்று உதவியிருக்க வேண்டும். கூட்டத்தை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். யார் மீதும் குற்றம் சுமத்துவது அல்லது தண்டனை வழங்குவது எங்கள் நோக்கமல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது. இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்டு உரிய சிகிச்சை வழங்கி, முதலமைச்சர் இரவோடு இரவாக நேரில் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் 14 வயது மகன் சக்திவேல் பள்ளி செல்லாமல் உள்ளார். தீமையில் ஒரு நன்மை என்பதுபோல, அவரைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. இதற்காக தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது" என்று எம்.ஏ. பேபி பேசினா.
வாசுகியின் வலியுறுத்தல்
கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், "இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளோ, போராட்டங்களோ நடைபெறாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விடக்கூடாது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
செய்தியாளர்: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.