/indian-express-tamil/media/media_files/2025/11/02/karur-2025-11-02-13-15-50.jpg)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாநிலப் பொதுச்செயலாளர் ஆனந்து உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆளும் தி.மு.க அரசின் நிர்வாகக் குறைபாட்டை குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு நடந்த இடத்தை சி.பி.ஐ எஸ்.பி பிரவீன்குமார், ஏ.எஸ்.பி முகேஷ்குமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர், தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் புதிய திருப்பமாக, சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று (இரண்டாவது நாள்) நெரிசல் ஏற்பட்ட இடம் மற்றும் அருகிலுள்ள இடங்களை நவீன 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் 6 மணி நேரம் அளவீடு செய்தனர். இந்த 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பம், நெரிசல் எங்கே அதிகமானது, மக்கள் எந்த திசையில் நகர்ந்தனர், தடைகள் எவ்வாறு உருவானது போன்ற அனைத்து கூடுதல் தகவல்களையும் நுணுக்கமாக கண்காணிக்கும் திறன் கொண்டது. நுழைவு வாயில், வெளியேறும் பாதை, சுவர்கள், கூடாரத் தூண்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மக்கள் நெரிசலை எவ்வாறு பாதித்தன என்பதைப் புரிந்துகொள்ள அதிகாரிகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
விபத்து விசாரணைத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய கருவிகளில் ஒன்றாக நிபுணர்கள் 3டி லேசர் ஸ்கேனரைக் குறிப்பிடுகின்றனர். இந்த கருவி, சம்பவ இடத்தின் ஒவ்வொரு மில்லிமீட்டர் விபரத்தையும் நேர்மையான அளவீட்டுடன் பதிவு செய்து, அந்த இடத்தை முழுமையாக டிஜிட்டல் 3டி வடிவத்தில் உருவாக்குகிறது. மனிதர்களின் வாக்குமூலங்களில் மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு என்றாலும், 3டி லேசர் ஸ்கேன் தரவு என்பது மறுக்க முடியாத உண்மைச் சான்றாகக் கருதப்படுகிறது.
இதில் எந்தத் தவறும், மறைப்பும் நடக்க முடியாது. நிகழ்வு நடந்த துல்லியமான காரணத்தை இந்த டிஜிட்டல் மாடல் வழங்கும். நீதிமன்ற விசாரணையில் இத்தகைய தொழில்நுட்ப ஆதாரங்கள் தீர்ப்பை மிகத் தெளிவாக நிர்ணயிக்க உதவி செய்கின்றன என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மொத்தத்தில், சி.பி.ஐயின் இந்தத் தீவிரமான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான விசாரணைக்குப் பிறகு, உண்மையான விபத்திற்குக் காரணம் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us