கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரைப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 6 பெட்டிகள் தடம் புரண்டது. சரக்கு ரயிலில் 2 பெட்டிகள் தீ பற்றின.
இந்த விபத்தில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், பாக்மதி விரைவு ரயிலில் இருந்த பயணிகள் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 15-16 மணி நேரங்களில் ரயில் போக்குவரத்து சரி செய்யப்படும்.
ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர். ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பர்.
மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர். பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது. எனினும் விசாரணை நடத்தப்படும். னனஇந்த விபத்தில் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது என்று கூறினார்.
இந்த விபத்து காரணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. திருப்பதி – புதுச்சேரி, சென்னை திருப்பதி, சூலூர்பேட்டை நெல்லூர் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“