/indian-express-tamil/media/media_files/HhINLDppN23CXVLhEAfx.jpeg)
காவிரி ஆற்றில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் காவிரி ஆற்றில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்தும், நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும், தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு கர்நாடகாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், மதிமுக மாவட்ட செயலாளர் சேரன், தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி ராஜா, ரகுநாதன் உட்பட பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி முக்கொம்பு நுழைவாயில் இருந்து பேரணியாக மேலணைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.