கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று 24ம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிராக தனியார் ஆம்னி உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் “ கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ஏற்கனவே மனுதாரர்களுக்கு இடம் உள்ளது. அதில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க இடம் தர வேண்டும். கிளாம்பாக்கத்துக்கு செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும். ஆந்திரா, கர்நாடகம் செல்லும் ஆம்னி பேருந்துகளை மாதவரத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று “ வாதிட்டனர்.
அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “ பயணிகள் முழுவதுமாக இறங்கிய பிறகு காலி பேருந்துகளை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். ஆனால் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கலந்து பேச அரசு தயாராக உள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு வசதிகள் இருக்கிறது” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வழக்கை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தொடர்ந்து “ எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது, இதற்காக தமிழ்நாடு அரசு பாராட்ட வேண்டும். எந்த ஒரு புதிய திட்டம் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க இயலாது” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“