லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஆனந்தன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ. முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1 ஆம் வகுப்பில் மாணவரை சேர்க்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பள்ளி முதல்வர் ஆனந்தனை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆனந்தன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத், முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், இன்னும் விசாரணை முடிவடையவில்லை எனவே அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையாத தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதி ஆனந்தன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.