New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/04/XhVeKHcKlY2NuujpRfnw.jpg)
Tamilnadu
இவரது பாடல்கள்தான் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள், வாட்ஸ்அப் ஸ்டோரீஸ்கள் என எங்கு திரும்பினாலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
Tamilnadu
கேரள இசை உலகில், ராப் பாடகராக தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் 'வேடன்'. இவரது பாடல்கள்தான் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள், வாட்ஸ்அப் ஸ்டோரீஸ்கள் என எங்கு திரும்பினாலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும் ஒலிக்கும் இவரது பாடல்கள், இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனால், இந்த புகழ் வெளிச்சத்திற்குப் பின்னால், சர்ச்சைகளும், அன்புக்கட்டளைகளும் நிறைந்த ஒரு பயணமும் இருக்கிறது.
யார் இந்த வேடன்?
'வேடன்' என்ற பெயரால் பரவலாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். 2020 ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருந்த சமயத்தில், 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' (Voice of the Voiceless) என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு இசை உலகிற்குள் அடியெடுத்து வைத்தார். சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த இந்தப் பாடல், தீயாய் பரவி, வேடனை ஒரே இரவில் பிரபலமாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் தனது வரிகளில் அழுத்தமாகப் பதிவு செய்து, 'வாய்ஸ்லெஸ்' மக்களின் குரலாக மாறினார்.
திரைப்படங்களில் வேடனின் முத்திரை!
சுயாதீன இசை ஆல்பங்கள் ஒருபுறம் இருக்க, மலையாளத் திரையுலகிலும் வேடனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு, ஜோஜு ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'நாயாட்டு' (Nayattu) என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற 'நரபலி' (Narabali) என்ற பாடலை பாடியிருந்தார். அடுத்து, 2022 ஆம் ஆண்டு வெளியான 'நோ வே அவுட்' (No Way Out) திரைப்படத்தில் 'மரணத்தின் நிறம்' (Maranathinte Niram) என்ற பாடலை பாடினார்.
சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' (Manjummel Boys) படத்தில் இடம்பெற்ற 'குத்தந்திரம்' (Kuthanthram) என்ற பாடல், வேடனின் இசைத் திறனுக்கு மேலும் ஒரு சான்று. அதோடு மட்டுமல்லாமல், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்று உலக அளவில் கவனம் ஈர்த்த 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' (All We Imagine as Light) என்ற படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' (Kisses in the Clouds) பாடலையும் எழுதிப் பாடி, தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தினார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' (Narivetta) படத்தில் 'வாடா வேடா' (Vaada Veda) என்ற பாடலையும் வேடன் எழுதி பாடியுள்ளார். இன்றும் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வரும் வேடன், சுயாதீன இசை ஆல்பங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
சர்ச்சைகளும், அன்புக்கட்டளையும்!
இசைப் பயணம் சுமுகமாக சென்று கொண்டிருந்த வேளையில், சில சர்ச்சைகளிலும் சிக்கினார் வேடன். தனது பாடல்களில் இந்து மதத்தையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் அடிக்கடி அவமதிக்கிறார் என குற்றம்சாட்டி, பாஜக நிர்வாகிகள் சிலர் வேடன் மீது அண்மையில் காவல் துறையில் புகார் அளித்தனர். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
கேரளாவுக்கு வரும்போது வீட்டுக்கு வாங்க... திருமாவுக்கு அன்புக்கட்டளையிட்ட வேடன்! #Vedan | #Thirumavalavan | #VCK pic.twitter.com/AXrWgdu9Cb
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 4, 2025
இந்த சூழலில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வேடனிடம் வீடியோ கால் வாயிலாகப் பேசி, நலம் விசாரித்தார். அப்போது திருமாவளவனை கேரளாவுக்கு வரும்போது தனது வீட்டுக்கு வருமாறு வேடன் அன்புடன் அழைக்கும் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.