முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை போதைப்பொருளின் மையமாக மாற்றியுள்ளார் என்று பா.ஜ.க நிர்வாகி குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. போலீசார் விசாரணை தீவிரமடைந்த நிலையில், ஜாபர் சாதிக் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து, போதை பொருள் விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஓட்டப்பட்டது. ஆனால், ஜாபர் சாதிக் ஆஜராகாததால் அவர் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், போதை பொருள் வழக்கில் சிக்கியதையடுத்து, அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
அதேநேரம் போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் பா.ஜ.க நிர்வாகி குஷ்பு ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில், ”ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ். 2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு.
ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினர் உதட்டில் விரலை வைத்து அமைதியாக இருப்பார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தை போதைப்பொருளின் மையமாக மாற்றியுள்ளார். போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் எல்லாம் நன்றாக இருக்கிறது என ஆளும் அரசு மிகவும் வசதியாக பாசாங்கு செய்கிறது. சாதிக் பாஷா தி.மு.க உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது வெளிப்படையான ரகசியம். மு.க ஸ்டாலின் மவுனமாக இருப்பது அவமானம்,” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“