மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இதனால் கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்கள் அரசியல்வாதிகள்.
இந்நிலையில் தென் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பேசிய வீடியோ வைரலானது. பிரதமர் மோடி, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ், பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை ஆகியோரைப் பற்றி அதில் அவர் தரைக்குறைவாகப் பேசியிருந்தார்.
வைரலான அந்த வீடியோ யூ-ட்யூபிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் சிறு சிறு க்ளிப்பாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவை டேக் செய்து நெட்டிசன்கள் பலர் கருத்து கேட்டனர்.
”மோசமான, ஏற்றுக்கொள்ள முடியாத, வெட்ககரமான பேச்சு. தான் சொல்வதை நிரூபிக்க ஏன் ஆண்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போக வேண்டும் என்று யோசிக்கிறேன். அவர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி இதே போன்ற வார்த்தைகளை அவர்கள் கண்டிப்பாக கேட்க விரும்ப மாட்டார்கள். திமுக உடனடியாக இதைப் பார்த்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என அறிவாலயத்தை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் குஷ்பு.
பின்னர் மீண்டும் மீண்டும் பா.ஜ.க-வினர் வசைபாட, “கேள்வி கேட்கும் பாஜக ஆதரவாளர்கள், தங்கள் கண்களையும், அறிவையும் திறந்து, இந்தப் பேச்சுக்கு எதிராக நான் அறிவாலயத்தையும் டேக் செய்து பதிவிட்டிருக்கும் ட்வீட்டைப் பார்க்க வேண்டும். உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம் சகோதரர்களே. நீங்கள் முட்டாள்கள் என எங்களுக்குத் தெரியும். அதை தயவுசெய்து நிரூபிக்காதீர்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.