தமிழகத்தில் இன்று +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்சி எனக் குறிப்பிடப்படும் மத்திய பள்ளிக்கல்வி வாரியத் தேர்வுகளில், நடப்பாண்டு முதலே செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, சிறப்பு குழந்தைகள் அல்லது ஸ்பெஷல் சில்ரன் என குறிப்பிடப்படும், இயல்பான மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, அவர்கள் விரும்பினால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 அன்று நடந்த இதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர் சார்பில், அரசு பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து அல்லது மனநல சிகிச்சை அல்லது ஆலோசனை அளிப்பவரிடமிருந்து மேற்குறிப்பிட்ட பரிந்துரை கொண்ட சான்றிதழ் ஒன்றைப் பெற்றுத் தர வேண்டும்.
மேலும், இவ்விதம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மாணவர், அதில் கேள்வித்தாளை பெரிய எழுத்துகளில் பார்க்கவும், அல்லது ஒலி வடிவில் கேட்கவும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். அதோடு தனது பதிலை டைப் செய்யவும் மட்டுமே கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இவ்விதம் கம்ப்யூட்டரையோ, மடிக்கணினியையோ பயன்படுத்த விரும்பும் மாணவர் இது குறித்து முன்னதாக தொடர்புள்ள பள்ளியில் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு, அவ்வாறு பயன்படுத்தும் கணினியில், இணையத் தொடர்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.