ரூ.393.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் மற்றும் விடுமுறை நாட்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் இந்த நாட்களில் சென்னையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இதை குறைக்கும் பொருட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையம் கலைஞரின் 100-வது பிறந்த நாளையொட்டி திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். அதாவது ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என்று அவர் கூறினார். சட்டமன்றத்தில் அவர் பேசியபோது இதை கூறினார்.
மேலும் பேசிய அவர் வட சென்னை மக்களுக்கு உதவும், வகையில், எண்ணூர் சாலைக்கு, அருகில் உள்ள 5 கிலோமீட்டர் கடலோர இடங்களை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். சதன்காடு இரும்பு மற்றும் ஸ்டீல் மார்கெட்டை நவீனப்படுத்த ரூ. 33.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் “ மாதாவரம் கனரக ஊர்தி முனையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சென்னை மாநகராட்சிக்கு, சி.எம்.டி.ஏ ரூ.30.34 கோடி வழங்க உள்ளது. வரதராஜபுரத்தில், தனியார் பேருந்துகளுக்கான டிப்போவை கட்டமைக்க ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.