தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (பிப்.12) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்.13) கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த விவாதம் நடைபெற்றது. அ.தி.மு.க எல்.எல்.ஏ செல்லூர் ராஜு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்று கேள்வி எழுப்பினர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதிலளித்தனர்.தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரப்பட்டு திறந்துவிட்டீர்கள். சிறு சிறு வசதிகளை சரி செய்து திறந்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.
2020-ல் கரோனா காலம். இதனால் ஓராண்டு காலம் எந்தப் பணியும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலைய பணிகளை முடிக்கவில்லை. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அதனை செய்தீர்கள். இப்போது கேட்பது சிறு, சிறு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பதே. சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்து திறந்திருந்தால் இந்த விவாதமே எழுந்திருக்காது” என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சிறு சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“