/indian-express-tamil/media/media_files/2025/07/24/hospital-2-2025-07-24-06-37-24.jpg)
சிறுநீரக திருட்டு புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தறி தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படும் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மோசடியில் ஈரோடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், ஏற்கனவே முறையற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்னையில், ஈரோடு அபிராமி கிட்னிகேர் மருத்துவமனை செயல்படுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் அவசர சிகிச்சையான டயாலிசிஸ் மட்டுமே மேற்கொள்ள அந்த மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுநீரக திருட்டு புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதேபோல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திருச்சி தில்லை நகரில் இயங்கி வந்த சிதார் மருத்துவமனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை தி.மு.க-வின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது. திருச்சி தில்லைநகரில் உள்ள சிதார் மருத்துவமனை, தி.மு.க அமைச்சர் கே.என். நேருவுக்கு நெருக்கமான டாக்டர். ராஜமாணிக்கம் நடத்தும் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.