திருச்சி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 1,519 பயனாளிகளுக்கு ரூ 11.85 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு; ஈரோடு இடைத்தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும் அதற்காக பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம். ஒன்னரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் கூறி வாக்கு சேகரிக்கின்றோம்.
ஈரோடு நகரத்தைப் பொறுத்த அளவில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம். தி.மு.க நல்ல நிலையில் இருக்கின்றது. முதலமைச்சர் ஈரோடு இடைத்தேர்தலில் அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி தோழமை கட்சிகளின் மாண்பை காத்திருக்கிறார்.
நாங்கள் வேட்பாளரை அறிவிச்சிட்டோம். தேர்தலுக்கு போறோம். நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஸ்டாலின்குமார், கதிரவன், மேயர் அன்பழகன், ஆகியோருடன் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.