/indian-express-tamil/media/media_files/xoIAKFcJdSKuOoTEJ6lt.jpg)
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, தொகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர், உத்ராபதி, செல்வம், பொருளாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், பகுதி செயலாளர்கள் இளங்கோ, கமல் முஸ்தபா, நாகராஜ் கனகராஜ், கவுன்சிலர்கள் நாகராஜன், கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் அமைச்சர் கே என் நேரு.
அதன் பின்னர் நிர்வாகிகளிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், சமூக வலைதளங்களில் அதிமுக- பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பொருந்தாத கூட்டணி என இதுவரை சொல்லி வந்திருக்கிறார்கள்.
புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் தனியாக நிற்பதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தனியாக நிற்கிறார்களா? அல்லது கூட்டணி சேர்ந்து நிற்கிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் பார்வையாளர்களும் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக மீண்டும் தளபதி ஸ்டாலின் தான் வருவார் என சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஒன்றிய செயலாளர் முப்பதாயிரம் வாக்காளர்களை திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு பகுதியில் உள்ள இந்து மைனாரிட்டி ஓட்டுக்களில், 200 ஓட்டுக்களை திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க, அதே சமுகத்தை சேர்ந்த மூன்று நபர்களை ஒரு குழுவாக நியமிக்க வேண்டும் என தலைமை சொல்லி இருக்கிறது.
எத்தனை குழுக்கள் அமைத்தாலும், வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய செயலாளருக்கு உறியது. கடந்த 30 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை நான் எந்த ஒன்றிய செயலாளரையும் பதவியில் இருந்து நீக்கியது கிடையாது. ஒரு ஒன்றிய செயலாளருக்காக காவல்துறையில் சண்டை போட்டு மீண்டும் அவரை ஒன்றிய செயலாளராக்கி இருக்கிறேன். இதனை கவனத்தில் கொண்டு ஒன்றிய செயலாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இல்லை என்றால் நீங்களே சொல்லிவிடுங்கள் வேறு ஆட்களை நியமித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் டெல்டா பகுதி, தளபதிக்கு நல்ல வாய்ப்புள்ள பகுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு, இரண்டாவது முறை தளபதி அவர்களையும் முதல்வராக்க வேண்டும். அதற்கு நாம் எந்தவித சர்ச்சைகளுக்கும் சங்கடங்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமித்த கருத்தோடு உழைக்க வேண்டும்.
லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை சொல்ல போகிறோம். வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றமடைந்து அதனால் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது என பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.