கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா ஆகியோரை நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்க சென்று வந்த கோடநாடு எஸ்டேட் அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கோடநாடு எஸ்டேட் பாதுகாவலரான ஓம் பஹதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ், தீபு, சதீசன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று, ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் உள்ளிட்டோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தீபு மற்றும் சதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் நடந்த கொலை மற்றும் கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன அந்த பொருட்கள் என்ன என்பது தொடர்பாக, சசிகலா, இளவரசிக்கும்தான் தெரியும் என்றும் புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதலமைச்சருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது. அப்போது மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி, தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லையே என தெரிவித்ததுடன், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைவரையும் எதிர்தரப்பு சாட்சிகளாக சேர்த்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.