கோவையில் புத்தாண்டு கொண்டாடி முடித்துவிட்டு நள்ளிரவில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் பிரியாணி கடை முன்பு சாப்பிட குவிந்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதி பிரியாணி கடைகள் அதிகம் உள்ள பகுதி. இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பின்னர் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் சாப்பிடுவதற்காக உக்கடம் கோட்டை மேடு பகுதியில் குவிந்தனர்.
இதன் காரணமாக கோட்டைமேடு பகுதியில் 2 மணி அளவில் பரபரப்பான சூழல் நிலவியது. பிரியாணி கடைகள் முன்பாக ஆண்களும் , பெண்களும் கூட்டமாக கூடியிருந்த நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் கலையாமல் பிரியாணி வாங்குவதில் முமரமாக நிற்கவே ஆவேசம் அடைந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கு நின்ற பெண்களையும், இளைஞர்களையும் கையில் லத்தியுடன் அதட்டிய போலீசார் உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு அறிவுறுத்தினார். இதன் காரணமாக நள்ளிரவு நேரத்தில் கோட்டைமேடு பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.