திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தின் தூண் பகுதியின் கீழ் உள்ள சிமெண்ட் கட்டையில் 50 வயது மதிக்கத்தக்க உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முக்கொம்பு அணையில் இருந்து உபரி நீர் கொள்ளிட ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது.
பெரும்பாலும் கொள்ளிடம் ஆற்று மணல் வெளி மற்றும் தடுப்பு கட்டைகள் மீது அப்பகுதியைச் சார்ந்த பலர் கொள்ளிடம் வறண்டு இருப்பதால் அங்கே உறங்குவது வழக்கம். வெள்ள எச்சரிக்கை கொடுத்த பிறகும் அப்பகுதியில் ஆற்றின் நடுவே உள்ள மேம்பால தடுப்பு கட்டையில் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை தண்ணீர் சூழ்ந்தது.
இது குறித்த தகவல் தீயணைப்பு துறைக்கு தெரியப்படுத்த, ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட நபரை, மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து கயிறு மூலம் தீயணைப்பு படை வீரர் ஒருவரை ஆற்றுக்குள் இறங்கி மற்றொரு கயிறு மூலம் ஆற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டு இருந்த நபரை, திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சசிகுமார் (60) என்பது தெரிய வந்தது. இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு கொள்ளிடம் ஆற்றின் கீழே சிமெண்ட் கட்டையில் உறங்கி உள்ளார்.
தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் 60,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. விழித்து பார்த்தவுடன் தண்ணீர் சூழ்ந்ததால் அவரால் கரைக்கு வர முடியவில்லை. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால், திருச்சி காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்